ஆவின் நெய் இனி பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்: எடப்பாடி பழனிசாமி

9 மாதங்களில் நெய் விலையை ரூ. 115 உயர்த்தி ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு என, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஆவின் நெய் விலை நேற்று கிலோவுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் வெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர். எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.