தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது: ஜெயக்குமார்

தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் சுனாமி தினம் அனுசரிப்பு நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஒக்கி, கஜா புயல் ஆகியவற்றை திறமையாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிற்கு முன்னர் பின்னோக்கி பார்த்தால் எந்த புயலுக்கு எந்த நிவாரணமும் அளித்தது கிடையாது. தற்போது ‘மாண்டஸ்’ புயல் வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதே இடத்தில் முதல்-அமைச்சர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக நிவாரணம் வழங்குவேன் என்று சொன்னார். 15 நாட்கள் ஆகிறது. இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

அ.தி.மு.க. இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சசிகலா தெரிவித்திருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அதற்கு மேல் என்ன சொல்வது. சசிகலாவுக்கும் கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒற்றுமையாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது. தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.