உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாகவும் இருந்தார். அவர் இந்தியாவில் உள்ள சட்ட நிறுவனங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய உச்ச நீதிமன்றம் அவரைப் போதுமான அளவில் அங்கீகரிக்கவில்லை, டாக்டர் அம்பேத்கரின் சிலை இன்னும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்படவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் புல்வெளிகளில் அவரது சிலையைக் காண்கிறோம், அது உச்ச நீதிமன்றத்தில் காணப்படாதது வருத்தமளிக்கிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை இந்திய உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் அமைக்க வேண்டும், அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 14, 2023 க்குள் அதைச் செய்தால் சிறப்பாக இருக்கும் என இக்கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் அளித்துள்ள ’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் (BALSJ) குழுவின்’ கோரிக்கைக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில், BALSJ உறுப்பினர்கள் அரசியலமைப்புச்சட்ட வரைவுக்குழுவின் தலைவரான டாடர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவை உச்ச நீதிமன்றம் உரியவகையில் சிறப்பிக்க வேண்டும் என தொடர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்படுவதற்கு அவர்களின் முயற்சிகளே காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எம்.சி.செடல்வாட் மற்றும் ஆர்.கே.ஜெயின் போன்ற பல வழக்கறிஞர்களின் உருவப்படங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்றம் அமைவதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உருவப்படம் அங்கு 7 ஆண்டுகளுக்கு முன்புதான் இடம்பெற்றது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். இனியும் தாமதிக்காமல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையை விரைவில் நிறுவுவதுதான் சரியானது. BALSJ இன் கடிதத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உச்ச நீதிமன்ற வளாகம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிகிறது. வரும் ஆண்டில் அவரது சிலைக்கு அருகில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தால் அது சிறப்பாக இருக்கும்.

சமீபத்தில் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்வின் போது வழக்கறிஞர்களுடன் உரையாடியபோது, “நான் இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தனிப்பட்ட முறையில், டாக்டர் அம்பேத்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது அவருடைய தொலைநோக்குப் பார்வையால்தான்” எனத் தாங்கள் தெரிவித்தீர்கள். டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற BALSJ இன் கோரிக்கைக்கு பதிலளிக்கும்போது, அதை பரிசீலிப்பதாகக் கூறினீர்கள். எனவே, மேற்கண்ட கோரிக்கை தங்களால் கவனத்தில் கொள்ளப்படும் என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு மேதை மற்றும் அரசியல் நிர்ணய சபையின் ஒருங்கிணைந்த பகுதி மட்டுமல்லாமல், பல அம்சங்களில் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் பகுஜன் மக்களுக்கான நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறார். சமூக நீதியின் சின்னமாகத் திகழும் அவரது சிலை நீதி என்னும் கருத்தாக்கத்துக்கும் நடைமுறைக்கும் பிரதானமான அமைப்பாகத் திகழும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்படுவது விளிம்புநிலை சமூகத்தினருக்கு மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.