“மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2025- 2026ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது ஒன்றிய அரசு. மெட்ரோ ரயில் திட்டம், சாலை பணிகள் என எந்த திட்டத்துக்குமே தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். எங்கு தேர்தல் நடக்கிறதோ, எங்கு அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருக்கிறதோ அங்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.