‘யார் அந்த சார்?’ என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை தேவை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? எப்.ஐ.ஆர். வெளியானது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், திமுக அரசு இந்த வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ? என சந்தேகம் எழுகிறது. ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான சி.பி.ஐ. விசாரணையே நீதியை வெளிக்கொணரும். யார் அந்த சார்? என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.