போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் நாளை மறுநாள் (பிப். 8) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவல நிலை தொடர் கதையாக இருந்து வருகிறது.
திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பல்வேறு குற்றச் செயல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளி மாணவிக்கு, தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கின்ற செயல். ஸ்டாலின் மாடல் திமுக அரசு இந்தக் கொடூரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ் நாட்டைத் தள்ளியதற்கு, ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில், 8.2.2025 – சனிக் கிழமை காலை 10 மணியளவில், `கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மு. அசோக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிறுமிகள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; பெண்களின் பாதுகாப்பை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருவாரியான மகளிர் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.