தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.
பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரும், காங்கிரஸ் ஆர்வலருமான ஜெக்லால் சவுத்ரியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் பாட்னாவில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் ஒரு நல்ல வாழ்க்கைக்கான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும். இதை தெரிந்து வைத்திருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பின்தங்கிய பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளித்திருப்பதையும், ஏராளமானோர் தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற்றிருப்பதையும் மோடி சுட்டிக்காட்டுகிறார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் அதிகாரத்தை அவர் பறித்து விட்டார். அவரது மந்திரிகள் கூட ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின்பேரில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன்தான் செயல்படுகிறார்கள்.
நாட்டின் தற்போதைய அதிகார அமைப்பு மற்றும் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் பங்களிப்பு இல்லை. அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை பா.ஜ.க. ஏமாற்றி வருகிறது. கல்வி நிறுவனங்களில், வினாத்தாள்களை உருவாக்கும் இடத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் எட்டவில்லை. நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடமில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
எனவே அதிகார வர்க்கம், தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வெறும் உறுப்பினராக இல்லாமல், தலைவர்களாக மாறும் நாளை காண விரும்புகிறேன். வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டும் போதாது. ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முதல் படி, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். இதுதான் சமூகத்தின் ஒரு உண்மையான எக்ஸ்ரே ஆக இருக்கும். ஆனால் இதை மோடி அரசு தவிர்க்க விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பு போல, பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பு சிறப்பானதாக இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.