அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி இருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளதாவது:-
மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியவில்லை என்று தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். நல் உறவுகளாக வாழும் மக்களிடையே மதவெறியை ஊட்டி பிளவுபடுத்த முனைகின்றனர். பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ஒரு போதும் வெற்றிபெற முடியாது.
உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன் முசாஃபர் நகரில் திட்டமிட்ட வகையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் பெற்றதுண்டு என்பதால், சங் பரிவார்களுக்கே இது உரித்தான அணுகுமுறையே. இப்படி திட்டமிட்டு வலிய வம்புகளை உருவாக்கி மதக்கலவர பூமியாக்க முயற்சிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எந்த மலைகளுக்கும் தமிழ்நாட்டில் ஆபத்து இல்லை. அண்ணாமலைகளின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே அவர்கள் அதனை காப்பாற்ற இப்படியொரு புது வேஷம் கட்டி ஆடப் புறப்பட்டுள்ளார்கள். அனைவரும் ஒன்றுபட்டு அமைதி பூங்காவான தமிழ்நாட்டை காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.