அண்ணமலை மக்களை குழப்பி, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் பெரிய கருப்பன்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கைக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பதிலளித்து பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். பேரிடர், வெள்ள நிவாரண நிதி உதவிகளை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத் தர இயலாத நிலையில் மக்களை குழப்பி, நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாளுக்கு ஒரு பிரச்சனை, வேலைக்கு ஒரு கருத்து என்று ஏதாவது திராவிட மாடல் அரசை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீண்டும் ஒரு முறை தன் அரைவேக்காட்டுத் தனத்தை நிருப்பித்துள்ளார்.

திராவிட மாடல் அரசு இதுவரை என்ன செய்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் தெரிந்துக் கொள்ளமால் கடமைக்காக ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் விவசாய பிரச்சனை எனத் தொடங்கி, சட்டம் ஒழுங்கு என பல்வேறு புலம்பல்களைச் சொல்லி மீண்டும் மீண்டும் திமுக-வை வம்புக்கு இழுக்கிறார். குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவித்தை சுட்டிக்காட்டி அர்த்தமற்ற, அவசியமில்லாத, தொடர்பற்ற வினாவினை எழுப்பியுள்ளார்.

மாண்புமிகு தளபதி அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு எண்.33-ல் தெரிவித்துள்ள சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்து அவற்றிற்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவர்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்தது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க அரசுதான் என்ற விவரம் கூட தெரியாமால் பா.ஜ.க. தலைவர் தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

31.01.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் சிறு, குறு விவசாயிகள் 16,43,347 நபர்கள் பெற்றிருந்த பயிர்கடன்கள் ரூ.12,110.74 கோடி அளவிலான தள்ளுபடிக்கான தொகையை தளபதி தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலை கடந்த கால அரசால் கஜானா காலி செய்த நிலையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அதற்கு நிதி ஒதுக்கி விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாய பெருங்குடி மக்களின் வாழ்கையை காப்பாற்றியது தளபதி அவர்கள் தலைமையிலான கழக அரசு தான்.

முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2021-2022 ஆம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10,635.37 கோடி பயிர் கடன்களை 15,44,679 விவசாயிகளுக்கு வழங்கியது. 31-03-2024 வரை நான்கு ஆண்டு காலத்தில் ரூ.61007.65 கோடி பயிர் கடன்களை 79,18,350 விவாசய பெருமக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது. விவசாய பெருமக்களை ஊக்குவிக்கும் விதமாக பயிர்கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விவசாய கடன்களுக்கு மறு நிதி அளிக்கும். ஆனால், தற்போது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நபார்டு வங்கி கடந்த காலத்தில் மறு நிதி அளிப்பதை வெகுவாக குறைத்த போதிலும் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு கடன் அதிக அளவில் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழக நிதியை வழங்கி எப்பொழுதும் இல்லாத அளவில் பயிர்கடன்கள் அதிக அளவில் விவசாய பெருமக்களுக்கு இவ்வரசு வழங்கி வருகிறது.

கூட்டுறவுத்துறையில் கடன்கள் வழங்குவது மட்டுமின்றி பல்வேறு விதமான சேவைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுவிநியோகத் திட்டம் மூலமாக 34,793 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தமிழக மக்களுக்கு கூட்டுறவுத்துறை கொண்டு சேர்க்கிறது. மேலும், புயல், வெள்ளம் போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் அவர்களுக்கான நிவாரணம் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு தொகுப்புகளையும் பொது மக்களுக்கு கொண்டு சேர்பது கூட்டுறவுத் துறை.

கிராமபுற மக்கள் பயன் பெறும் வகையில் கடன் திட்டங்களையும், சேமிப்புகளை ஊக்குவிக்கின்ற வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்களையும் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகிறது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துப் பொருட்கள் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இத்துறையின் மூலம் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உரம் மற்றும் விதைகள் போன்றவை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் மானிய விலையில் தரமானதாகவும் வழங்கி வருகிறது. மேலும், மேற்கண்ட பல்வேறு சேவைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனையின் படி கூட்டுறவுத்துறை சிறப்பாக செய்து வருகிறது.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் எதையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தராமல் திரு.அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக அரைவேக்காடு அறிக்கையினை விடுத்து தான் குழம்புவது மட்டுமல்லாமல், மக்களையும் குழப்பும் நோக்கத்தோடு செயல்படும் பா.ஜ.க மாநில தலைவரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.