எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்: டிடிவி தினகரன்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்; எடப்பாடி பழனிசாமியின் இந்த சுயநலத்தால் அதிமுக 2026-ல் மூடுவிழா காணும் என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது:-

2026-ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி வீழ்த்தப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவருக்கும் உண்மை நிலை என்ன என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு எம்ஜிஆரின் கட்சியை (அதிமுகவை) கேடயமாக பயன்படுத்தி வருகிறார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உதவி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருந்தால், அதிமுகவுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டனர் என்றுதான் அர்த்தம். தற்போதைய நிலையை நீடிக்க விட்டால் நான் சொல்வதுதான் நடக்கும் என்பதை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சீமான் கடந்த காலங்களில் தந்தை பெரியாரை எப்படி எல்லாம் புகழ்ந்து பேசினார்.. இன்றைக்கு அந்தர் பல்டி அடித்து பெரியார் போன்ற தமிழ்நாட்டில் எல்லோரும் மதிக்கின்ற தலைவர்களை எல்லாம் ஒரு அரசியல்வாதியாக எனக்கு கூட வெட்கக் கேடாக இருக்கிறது. 2026-ல் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கிறதா? இல்லையா என்பதை எல்லாம் நடிகர் விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை தன்னுடன் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக கூட்டணி வரும்.. வரும் என கூறி வருகிறார். அதிமுக, இலங்கையில் உள்ள கட்சியுடனா கூட்டணி அமைக்கும்? ஆந்திராவில் உள்ள கட்சியுடனா கூட்டணி அமைக்கும்? அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்டணி அமையும்.. அமைந்துவிடும் என்று சொல்வது எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் ஏமாற்று வேலைதான். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் முடிவால்தான் திமுக வெற்றி பெற்றது; பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதை எடப்பாடி பழனிசாமியின் முடிவுதான் தடுத்தது. மோடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்க வேண்டியதை எடப்பாடி பழனிசாமி தடுத்துவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் எங்களோடு ஒன்று சேருவார்கள்; ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்துவார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.