69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமி ஆகும் எனவும், 69% இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று மேடையில் பேசினர். இறுதியாக மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
இங்கு மேடையில் உள்ள நாங்கள் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துக்கள் கொண்டு இருந்தாலும் சமூகநீதி என்ற கருத்தின் அடிப்படையில் இங்கு ஒன்றுகூடி உள்ளோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்தான் சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீத இட ஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்.
தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஆமைகள் இவற்றிற்கெல்லாம் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்களின் நிலை குறித்தும் அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் அவர்களை முன்னேற்றவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் அதனை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு எடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சட்டம் தான் உள்ளது. பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் சாத்தியம் தானே தமிழக முதல்வர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் அதே போயை சொல்லி வருகிறார். சட்டமன்றத்திலும் அதே பொய்யை பேசுகிறார். மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க உள்ளது. அதனோடு சேர்த்து இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள சில சமுதாயங்களில் ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி கூட கிடையாது, டாக்டர்கள் கிடையாது அப்படியானால் சமூக நீதி எங்கே உள்ளது? பிறகு எப்படி அந்த சமுதாயங்கள் முன்னேறும். தமிழ்நாட்டில் எந்தெந்த சாதி எவ்வளவு உள்ளது என்ற அனைத்து விவரங்களும் திமுகவிடம் உள்ளது. எந்த தெருவில் எந்த சாதி உள்ளது எந்த வீட்டில் எத்தனை சமூகத்தினர் உள்ளனர் என்ற விவரங்களை திமுக வைத்துள்ளது.. ஆனால் அந்த விவரங்களை சமூக நீதிக்காக பயன்படுத்தாமல் ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிடும் அதன் பிறகு அந்தந்த சாதியினர் தேர்தலில் போட்டியிட கூடுதலாக சீட்டு கேட்பார்கள் கட்சியில் அதிகமாக மாவட்ட செயலாளர்கள் கேட்பார்கள் என்பதனால் திமுக இதனை எடுக்க மறுக்கிறது.
தமிழக முதலமைச்சர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்வது வேடிக்கையாக உள்ளது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் பிராமணர்கள், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டை கொடுக்கலாம்.. அதற்கு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும். நாங்கள் முதற்கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதன் பிறகும் முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.