தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டுதொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்!

தேமுதிக-வின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொடிநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிப்ரவரி 12-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழா 25-ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 2000-ம் ஆண்டு நமக்காக மூவர்ண கொடியை நமது தலைவர் கேப்டன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின், அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடிநாளை தமிழக முழுவதும் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, சனாதனம், சமதர்மம், சமூகநீதி, சமசிந்தனையை பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு நமது தலைவர் அளித்தார்.

ஜாதி, மத, மொழி வேறுபடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தரமான மருத்துவம், வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகராமான கொள்கைகளையும் கொடி அறிமுகப்படுத்திய அன்றே நமக்கு உறுதிசெய்திருக்கிறார்.

அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றிப், புதுக்கொடிகளை ஏற்றி, கழக கொடிகள் இல்லாத இடத்தில் புதுக்கொடிகளை அமைத்து வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தேமுதிக கொடியை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்றிட வேண்டும்.

தலைவர் கேப்டனின் கோட்பாடு படி இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, அதிகமான உறுப்பினர்களை நமது கொடி நாளில் முகாம்கள் அமைத்து பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து, அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக நமது கழகத்தை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கழகக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட நாம் அனைவருமே உறுதிமொழி ஏற்போம் என தேமுதிக வெள்ளி விழா ஆண்டு கொடிநாளில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயாகாந்த் கூறியுள்ளார்.