பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது எஸ்.சி எஸ்.டி ஆணையம். ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் நிலம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகாரை எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் 3வது அமர்வு விசாரித்தது. அதன்படி, பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது எஸ்.சி எஸ்.டி ஆணையம்.
தேனி மாவட்டம், ராஜாகளம் என்னுமிடத்தில் உள்ள 40 செண்ட் பஞ்சமி நிலம், 1991 ஆம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. நிபந்தனையின் படி, 15 ஆண்டுகளுக்கு நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது. அதன்பிறகும், அந்த நிலத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும். இந்த நிபந்தனையை மீறி, மூக்கன் இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு 2008 ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்துள்ளார். ஹரிசங்கரிடம் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியுள்ளார். நிபந்தனையை மீறி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் மாநில பட்டியலின மற்றும் பழன்க்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், பஞ்சமி நிலத்தை பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினஎ நலத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.சி, எஸ்.டி ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நிலம் வாங்குவோர் தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தான், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஞ்சமி நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியலின மக்களுக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சுமா 1 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.