சாதி வெறியர்களுக்கு எதிராக சட்டம் மிகக் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும் என ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் புல்லட் ஓட்டினார் என்பதற்காக, அவரது கைகளை வெட்டும் சாதியக் கொடூரம் நெஞ்சை உறையச் செய்கிறது. இந்த கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
இம்மாதிரியான கொடுஞ்செயலை செய்வதற்கான தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்த அப்பட்டமான சாதிவெறி குறித்து, ஒரு சமூகமாக நாம் வெட்கித் தலைகுனிவதோடு, இந்த சாதி வெறியர்களுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் கடுமையான நிலைபாட்டை எடுக்கவேண்டும். சட்டம் மிகக் கடுமையாகவும், விரைவாகவும் எதிர்வினயாற்ற வேண்டும்.
இம்மாதிரியான குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமூகத்தின் கூட்டு மனசாட்சி மற்றும் அற உணர்விலிருந்தும் எக்காரணத்தை முன்னிட்டும் தப்பித்துவிடக் கூடாது. புரையோடிப் போயிருக்கும் சாதியக் கட்டமைப்புகளை கேள்வி கேட்பதும், தகர்ப்பதும், சாதிவெறியின் காரணமாக நடக்கும் கொடூரங்களை கண்டும் காணமல் போகாமல் கடுமையாக கண்டிப்பதும், ஒரு நியாயமான, அன்பும், சுயமரியாதையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கும். அதுவே நமது சமூகம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லது. இவ்வாறு ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.