மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.18) இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதையும், தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வரும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நாளை பிப்.18 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர், மாணவர், மாதர் என அனைவரும் அணி, அணியாக திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.