நிதானம் இல்லாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம். முதல்-அமைச்சரை ‘அப்பா’ என பெண்கள் அழைப்பது அடிவயிற்றில் அவர்களுக்கு எரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
”மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்” என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.
”அம்மா.. அம்மா..” என அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு “சின்னம்மா இல்ல…எங்க அம்மா” என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.
மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து “நன்றி அப்பா” என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அ.தி.மு.க.வுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதல்-அமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.. அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.