மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வந்தால்.. நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? என்று ஆவேசமாக பேசினார்.
சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு நாம் அனுப்பி வைக்கிறோம். எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம். அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள். அதேபோல். ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்க மாட்டோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம் எனச் சொல்லுங்கள். பிரதமர் நரேந்திர மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்.
தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார்.. அவருக்கு கோபம் தான் வருகிறது.. தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.. எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்..
ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை.. வர்தா புயல் வந்தால் பணம் இல்லை.. தானே புயல் வந்தால் பணம் இல்லை.. இயற்கை பேரிடர் பாதித்தால் பணம் இல்லை.. சென்னை மூழ்கினால் பணம் இல்லை.. குரங்கணி தீ விபத்தில் மீட்க ஹெலிகாப்டர் அனுப்புங்கள் என்று சொன்னால், 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாது என்கிறார்கள். அப்புறம் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்.. நான் அதிகமாக பேசிட்டால், முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அழைத்து.. ஏன் வேலு இப்படி பேசினாய் என்று கேட்பார்.. எனக்கு ஆத்திரம் பொங்குகிறது.. கோபம் வருகிறது.. நாளையே வைத்திருக்கிறேன் கட்சேரி. என்னை இறங்கி வேலை பார்க்க முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.