செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனு!

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் 472 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் 2024 செப்.28-ம் தேதி அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி வித்யாகுமார் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, ‘அமைச்சர் பதவியில் இல்லை எனக்கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் பணமோசடி வழக்குகளில் அரசுப்பணியாளர்கள் சாட்சிகளாக உள்ள நிலையில், அவர் அமைச்சராக பதவியில் நீடிக்க விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறிவிட்டதாகவும், எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற பிறகு சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் சரியாக சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. சில முக்கியமான சாட்சிகள் அவரது துறையில் இதற்கு முன்பாக பணியாற்றியவர்கள். செந்தில் பாலாஜியும் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகுவதில்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியுள்ளனர்.