அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்: அண்ணாமலை!

சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்​பிட்டுச் சொல்​லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சேலத்​தில் திருமண நிகழ்ச்​சி​யில் பங்கேற்க நேற்று வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:-

தமிழகத்​தில் மாணவர்கள் 3 மொழிகளைப் படிக்க வேண்​டுமா என்பது​தான் தற்போது முக்​கியப் பிரச்​சினையாக உள்ளது. தனியார் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் எண்ணிக்கை 56 லட்சத்​தைக் கடந்​து​விட்​டது. அரசுப் பள்ளி​களில் 52 லட்சம் மாணவர்கள் பயில்​கின்​றனர். சிபிஎஸ்இ பள்ளி​களின் எண்ணிக்கை 200-ல் இருந்து 2,010-ஆக அதிகரித்​துள்ளது. மக்கள் தனியார் பள்ளிகளை விரும்​பு​கின்​றனர். திமுக​வினர் நடத்​தும் சிபிஎஸ்இ பள்ளி​கள், விசிக தலைவர் சேர்​மேனாக இருக்​கும் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய​வற்றில் இந்தி கட்டாயப் பாடமாக உள்ளது. தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்து​கிறார். ஆனால், இவர்கள் அரசுப் பள்ளி​களில் இருமொழிக் கொள்​கை​தான் வேண்​டும் என்கின்​றனர்.

அரசுப் பள்ளி​களில் 3 மொழிகள் வேண்​டும் என்பது பிரதமரின் விருப்​பம். தமிழ் பாட மொழி​யாக​வும், ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு விருப்ப மொழி இருக்கவேண்​டும் என்பது​தான் பாஜக​வின் நோக்​கம். அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு இலவச உணவு, சீருடை, காலணி கொடுப்​பதாக உதயநிதி கூறுகிறார். அவரது தாத்தா, அப்பா வீட்டுப் பணத்​திலா இதை செய்​கிறார். தமிழக அரசு கல்விக்காக ஆண்டு​தோறும் ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கு​கிறது. ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்​காத​தால், தமிழகத்​தில் பள்ளிகளை நடத்த முடிய​வில்லை என்று கூறுவதை எப்படி ஏற்க முடி​யும்? மும்​மொழிக் கொள்​கைக்கு ஆதரவாக தமிழகத்​தில் மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் அவற்றை வழங்​கு​வோம்.

தமிழகத்​தில் பெண்​கள், குழந்தை​களுக்கு எதிரான குற்​றங்கள் அதிகரித்​துள்ளதாக ஏடிஜிபி அறிக்கை வெளி​யிடு​கிறார். ஆனால், சட்டம்​-ஒழுங்கு நன்றாக உள்ளதாக முதல்வர் கூறுகிறார். நான் கும்​பமேளா​வில் பங்கேற்கச் செல்​கிறேன். வரும் 26-ம் தேதிக்​குப் பின்னர் தமிழகத்​தில் இருப்​பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்​டபடி சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்​துக்கு, என்ன நேரத்​தில் வர வேண்​டும் என்று குறிப்​பிட்டுச் சொல்​லுங்​கள். திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்​திரங்​களைப் பயன்​படுத்தி, எக்ஸ் தளத்​தில் ‘கெட்​-அவுட் மோடி’ என்று டிரென்​டிங் செய்​துள்ளனர். ஸ்டா​லின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்​டும் என ‘கெட்​-அவுட் ஸ்டா​லின்’ என எக்ஸ் தளத்​தில் நாளை (இன்று) பதிவிடப்​போகிறோம். யார் அதிகமாக டிரென்​டிங் செய்​தனர் என்ப​தைப் பார்த்து​விடு​வோம்.

அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று உதயநிதி கூறுகிறார். எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்​டோரை தரம் தாழ்ந்து பேசி​யவர் உதயநிதி. கும்​பமேளா​வுக்கு 70 கோடி பேர் வந்துள்ளனர். அங்கு பக்தர்​களுக்​காக, சிறப்பான ஏற்பாடுகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்​யநாத் செய்து கொடுத்​துள்ளார். ஆனால், சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்​சி​யைக் ​காணவந்த 10 லட்சம் பேருக்கு வசதி செய்து ​கொடுக்க தமிழக அரசால் ​முடிய​வில்லை. இவ்​வாறு அண்ணாமலை கூறினார்.