“அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெண் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி இனி பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
இன்றைக்கு தொடர்ந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பெண்களுக்காவும், அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பல வகையிலும் பெண்களுக்கு உதவிகரமாக இருந்த அரசு, அதிமுக அரசு என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். பெண் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் குடும்பம் பாதிக்கப்படும் என்று பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து கொடூரமாக கொலை செய்யும் செயல்களிலிருந்து தடுத்தவர் ஜெயலலிதா. அவர் தான் தொட்டில் குழந்தை திட்டத்தை தமிழகத்தில் உருவாக்கினார். மகப்பேறு நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், பெண்களுக்கான உடல் எடை பரிசோதனை செய்யும் திட்டம், மகளிர் சுய உதவி குழு திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் கூறினார்.