தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வருகிற 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளையும் அழைக்க முடிவு செய்து அவர்களுக்கு முறைப்படி இன்று முதலே அழைப்பு விடப்போகிறோம்.
இந்தக் கூட்டம் எதற்காக என்றால் தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆலோசிக்க. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இதற்காக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆகவே, மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் கடந்து, கட்சிகளை மறந்து பங்கேற்று குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.