தவெக தலைவர் விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி, ஆனால்.. வாட் ப்ரோ?: அண்ணாமலை!

“விஜய் குழந்தைகளுக்கும், அவர் நடத்தி வரும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. வாட் ப்ரோ? முதலில் பேசுவதை நீங்கள் கடைபிடியுங்கள் ப்ரோ!” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று (பிப்.26) நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். எங்கள் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி. இப்பினும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு அநியாயம் நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது என கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா மிகவும் தெள்ளத் தெளிவாக, மறு சீரமைப்பு நடக்கும். தற்போது 543 தொகுதிகள் உள்ளன. மறு சீரமைப்பு வரும்போது 543-ல் இருந்து அது 600, 700,800 என உயரலாம். விகிதாச்சார அடிப்படையில் தான் இருக்கும். எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் புரளியை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனவே, இது தொடர்பான தகவலை யார் கூறியது என்று முதல்வர் தெரிவிக்காவிட்டால் நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் சகோதரர் விஜய் பேசும்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டையும் குறை கூறியிருக்கிறார். விஜய் குழந்தைகளுக்கும் அவர் நடத்தி வரும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. வாட் ப்ரோ? முதலில் பேசுவதை நீங்கள் கடைபிடியுங்கள் ப்ரோ!

‘கெட் அவுட்’ கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட ஒரு நிமிடத்தில் நிறைவடைந்துவிட்டது. பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. எனவே, விஜய் மேடையில் பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும். பிரசாந்த் கிஷோரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இவ்வளவு செய்து ஏன் திமுகவை ஆட்சியில் கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள். அதற்காகவே மக்கள் எப்போதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் உங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என இந்தியாவில் இருந்து யார் எந்த வேலை செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்கள் கட்சியுடன் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஒருமித்த கருத்தோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்க, தெரிவிக்க நேரமும், காலமும் இருக்கிறது. நிச்சயம் அதற்கும் பதில் கூறுவோம்.

மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி காட்டன் 2.0 என்ற பருத்தி தொடர்பான திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்திய ஜவுளித்தொழில் பாதிக்காத வகையில் வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப்பொருட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. செயற்கை இழை இந்தியாவில் இரண்டே நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்கின்றன. எனவே ஒருபுறம் அவர்களையும் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு. மறுபுறம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் பணிகள் நிறைவடைந்து சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்க தேவையான உதவி மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வேன்.‘பாரத் டெக்ஸ்’ சர்வதேச ஜவுளி கண்காட்சி தமிழகத்தில், கோவையில் நடத்த மத்திய அரசிடம் எடுத்துக்கூறி தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன்.

எங்களுக்கு வியூகம் வகுப்பவர்கள் மூன்று பேர்தான். மக்களிடம் சென்று அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். இரண்டாவது கட்சி தொண்டர்கள், மூன்றாவது பத்திரிகையாளர்கள். இந்த மூன்று பேரிடமும் தொடர்பில் இருந்து அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்டால் போதும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.