என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசுதான் அசிங்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறை தரப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில், சீமான் மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக கிழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீமானின் வீட்டிற்கு, எதற்காக சம்மனை கிழித்தீர்கள் என்று விசாரணை செய்ய போலீசார் சென்ற போது, அங்கிருந்த காவலாளி ஒருவர் காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டார். அப்போது துப்பாக்கி இருக்கிறது என்று காவலாளி மிரட்டியதால், உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சம்மனை கிழித்த நபரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தால் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.
இதனிடையே சீமான் வீட்டில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நாதக கலந்தாய்வு கூட்டத்தில் இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது:-
நான் கிருஷ்ணகிரியில் இருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். பயந்து ஓடமாட்டேன் பிறகு ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்டுகிறார்கள்? சேட்டைதானே.. என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த அரசு வேறு எந்த விஷயத்திலாவது இப்படி நடவடிக்கை எடுத்துள்ளதா? நான் விசாரணைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏற்கனவே விசாரணைக்கு வந்து பதில் அளித்திருக்கிறேன். நான் ஒன்றும் பயந்து ஓடி ஒளியும் கோழையல்ல. இதனால் நான் அசிங்கப்படுவேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் அசிங்கப்படுகிறீர்களா?.
நாளையே வர வேண்டும் என்கிறார்கள். என்னால் வர முடியாது. மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி மக்களுக்கு சொல்ல வருவது என்ன? என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கு நான் போட்டதுதான். திமுக ஆட்சிக்கு வரும் போது இந்த வழக்குகள் வரும். தேர்தல் வரும் போது இப்படி வழக்கு கொண்டு வருவார்கள். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போதெல்லாம் இப்படியான வழக்குகள் வரவில்லை. என்னை சமாளிக்க முடியவில்லை என்றால், அந்த அம்மாவை கூட்டி வந்து நிற்பார்கள். பெரியார் விவகாரத்திற்கு பின் என்னை சமாளிக்க முடியாமல் இப்படி செய்கிறார்கள். விசாரணையில் என் மீதான புகார்களுக்கு ஆதாரம் கேட்க வேண்டும். அதன்பின் தவறு நிரூபிக்கப்பட்ட பின், தீர்ப்பு அளிக்க வேண்டும். வளசரவாக்கம் காவல் நிலையம் எங்கும் போக போவதில்லை. நாளை வர முடியாது. என்னிடம் காட்டும் தீவிரத்தை அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அரசு காட்ட வேண்டும். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசுதான் அசிங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.