விமான நிலையம் அமைக்க பரந்​தூரை தேர்வு செய்தது தமிழக அரசு​தான்: மத்திய அமைச்சர் ராம் மோகன்!

விமான நிலையம் அமைக்க பரந்​தூரை, தமிழக அரசு​தான் தேர்வு செய்து தந்தது. அங்கு நிலம் கையகப்​படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசு​தான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மத்திய விமான போக்கு​வரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரி​வித்​தார்.

நாடு முழு​வதும் விமான நிலையங்​களில் உள்ள உணவகங்​களில் உணவு விலை பல மடங்கு அதிகம் உள்ளதாக புகார் எழுந்​த​தால், விமான நிலை​யங்​களில் மலிவு விலை உணவகங்களை திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்​தது. அதன்​படி, நாட்​டில் முதல்​முறையாக கொல்​கத்தா விமான நிலை​யத்​தில் ‘உடான் யாத்ரி கஃபே’ கடந்த டிசம்பர் மாதம் திறக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில், சென்னை சர்வதேச விமான நிலை​யத்​தில், நாட்​டின் 2-வது ‘உடான் யாத்ரி கஃபே’ மலிவு விலை உணவகத்தை, மத்திய விமான போக்கு​வரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:-

நாட்​டின் 4-வது பெரிய விமான நிலையம் சென்னை. இங்கு இன்னும் வளர்ச்சி பணிகள் மேற்​கொள்​ளப்பட வேண்டும். இதனால், இங்கு மற்றொரு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. ஏற்கெனவே பணிகள் முடிந்து, முதல்​கட்ட விமான நிலைய முனை​யத்தை பிரதமர் மோடி கடந்த 2023-ல் திறந்து வைத்​தார். இதன் 2-வது கட்டத்​துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை​யின் 2-வது விமான நிலை​யத்தை பரந்​தூரில் அமைக்க திட்​ட​மிடப்​பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்னை​யில் 2-வது விமான நிலையம் அமைப்பது குறித்து பல ஆண்டு​களாகவே ஆலோசனை நடந்து வருகிறது. மத்திய அரசை பொருத்​தவரை, மாநிலத்​தில் பல விமான நிலை​யங்களை அமைக்க விரும்​பு​கிறது. ஆனால், விமான நிலை​யங்கள் அமைப்ப​தற்கான தகுதியான நிலங்களை தேர்வு செய்வது மாநில அரசின் கடமை. மாநில அரசு தேர்வு செய்த இடத்தை முழு​மையாக ஆய்வு செய்து, சாத்​தி​யக்​கூறு ஆய்வு நடத்தி, விமான நிலையம் அமைக்க மத்தி​யஅரசு அனுமதி வழங்​கு​கிறது.

அதேபோல, சென்னை​யின் 2-வது விமான நிலையம் அமைக்க பரந்​தூரை, மாநில அரசு தேர்வு செய்து தந்தது. தற்போது அதற்கான நிலங்களை கையகப்​படுத்து​வதற்காக நடவடிக்கை​களில் ஈடுபட்​டுள்​ளது. அங்கு நிலம் கையகப்​படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசுதான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பான பிரச்சினைகளை மாநில அரசு​தான் சமாளிக்க வேண்டும். சென்னை விமான நிலை​யத்தை தனியார்​மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை.

விமான பயண டிக்​கெட் விலை ஏற்றத்தை கட்டுப்​படுத்த பல திட்​டங்களை முன்னெடுத்து வருகிறோம். விமானங்​களின் எண்ணிக்கையை அதிகரித்​தால், விமான கட்டணம் தானாக குறை​யும். எனவே, உடான் திட்​டத்​தில் பல புதிய விமான நிலை​யங்களை உருவாக்கு​வது, அதிக விமான சேவைகளை தொடங்​குவது போன்ற முயற்சி​களில் ஈடுபட்​டுள்​ளோம்.

விமான சேவைகளை நடத்துவது குறித்து வெளி​நாடுகள் உடனான புரிந்​துணர்வு ஒப்பந்​தங்களில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து புறக்​கணிக்​கப்​படு​வதாக கூறப்​படும் தகவல் சரியல்ல. வியட்​நாம் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்​கொள்​ளப்பட்ட புரிந்​துணர்வு ஒப்பந்​தங்​களில், சென்னை, கொல்​கத்தா விமான நிலை​யங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்​திலேயே அதிக தேவை உள்ள விமான நிலையம் கோவை. அங்கு உட்கட்​டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். தமிழகத்​தில் உடான் விமான சேவைகள் திட்​டத்​தில் முதல்​கட்​ட​மாக, சேலம், வேலூர், நெய்​வேலிக்கு விமான சேவை கொண்டுவர முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில், சேலத்​துக்கு ஏற்கெனவே விமான சேவை உள்ளது. சென்னை​யில் இருந்து வேலூருக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. விரை​வில் சென்னை- வேலூர் இடையே, விமான சேவைகள் தொடங்​கப்​பட்டு, வேலூர் விமான நிலை​ய​மும் செயல்பாட்டுக்கு வரும். நெய்​வேலி​யில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்​படுத்​தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்​சி​யில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் பங்கேற்​றனர்.