கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று தேர்பவனி நடக்க இருந்தது. தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இணையம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 15 நாட்களாக திருவிழா நடந்து வருகிறது. இன்று இரவு தேர்பவனி நடைபெற உள்ளது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி இன்று நடந்து வந்தது. இதற்காக தேவாலயத்தில் உள்ள ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். தேவாலயத்துக்கு வெளியே 4 பேரும் ராட்சத இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது அந்த பகுதியில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் இரும்பு ஏணி உரசியுள்ளது. இதனால் அடுத்த நொடியே உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் இரும்பு ஏணி வழியாக பாய்ந்தது. இதில் ஏணியை நகர்த்தி சென்று கொண்டிருந்த அருள், மைக்கேல் பிண்டோ உள்பட 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடிவந்தனர். மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் இருந்த 4 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் மட்டுமே உயிருக்கு போராடினார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவரும் இறந்தார். இதனால் மின்சாரம் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 4 ஆக அதிகரித்தது.