கச்சத்தீவு குறித்த அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்: ஆளுநர் ரவி!

1974-ம் ஆண்டு கச்சத்தீவு குறித்த அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்; கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சித்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:-

ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. (1974-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது; தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்றது) அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது.