ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி சிபிஐ வரை பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து 2022-ம் ஆண்டு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் எஸ்.பியாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை சென்றதாகவும், தற்போது அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்திருப்பதால் புலன் விசாரணை பாதித்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ளவர்களை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் புலன் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன் கடலூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி.க்கு மாற்றாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து ஏற்கெனவே இருக்கக்கூடிய எஸ்.ஐ.டி அதிகாரிகளோடு புலன் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.