தர்மேந்திர பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராகப் பேசுகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார். இதன்பின்னர் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த நான்காண்டுகளில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சில முத்திரைத் திட்டங்களை மட்டும் நான் தலைப்புச் செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.

* கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டதோடு அங்கே 6 ஏக்கர் பரப்பளவில், நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

* செங்கல்பட்டில் தனியார் பங்களிப்புடன் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதுது.

* மாமல்லபுரத்தில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* வரதராஜபுரம், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

* நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில், 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

* மறைமலைநகரில் புதிய தாவரவியல் பூங்கா

* உலகப்புகழ் பெற்ற ‘லண்டன் க்யூ கார்டன்’ அதனுடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

* தாம்பரம் அரசு மருத்துவமனையை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

* பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள், கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

* 43 கோடி செலவில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் ஆத்தூர் கிராமத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.

* செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் பயன்பாட்டில் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பையும் இந்த விழா மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன். அப்படி அறிவிக்கவில்லை என்றால் அன்பரசன் என்னை விடமாட்டார். தொழில்துறையில் முன்னணியில் இருக்கக்கூடியது செங்கல்பட்டு மாவட்டம். நேற்று கூட அதற்கு உதாரணமாக, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் அந்தப் பணிகளை முடித்து கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை நான் வந்து தொடங்கி வைத்தேன்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று இந்த விழா மூலமாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றன். நாங்கள் எதை அறிவித்தாலும் அதெல்லாம், அரசாணையாகும். வேகமாக செயல்பாட்டிற்கு வரும்! அதுமட்டுமல்ல, திட்டங்களை முடித்து, திறப்பு விழாவுக்கு நானே வருவேன்!

இப்படி, துரிதமாக செயல்படுகின்ற காரணத்தால் தான் இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது! பொருளாதாரக் குறியீடுகள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடிக்கும் மேலாக, தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான நம்பிக்கை! வறுமை இல்லை! பட்டினிச் சாவு இல்லை! என்ற நிலையில் திறமையான – வளமான – உண்மையான நிர்வாகத்தை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்.

சில தடைகள் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். நேற்று நாடாளுமன்றத்தில் நடந்ததை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ. 2,000 கோடியைத் தருவோம் என்று திமிராகப் பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல் கல்வியிலிருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை திட்டங்களும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, குழந்தைகளுக்குக்கூட பொதுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கு நீட் மாதிரியான நுழைவுத் தேர்வு.. இப்படி நிறைய இருக்கிறது.

கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்துக்கு இந்த கொள்கை வழிவகுக்குகிறது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால்தான் கல்வி நிதியைத் தருவோம் என்று அமைச்சர் பிரதான் பிளாக்மெயில் செய்கிறார். அதனால்தான் ரூ. 2,000 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தந்தாலும் உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக திட்டவட்டமாகச் சொன்னேன். இந்த மேடையிலும் இதனை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அநாகரிகமானவர்கள் என்று அமைச்சர் பிரதான் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். அரை மணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கின்றனர் நம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள். அவர்களுடைய போர்க் குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதிமுக உறுப்பினர்களைப்போல் அல்லாமல் யாருக்கும் பயப்படாமல் உரிமைக்காக போராடுவோம் என்று திமுக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.