தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வியை தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ரூ.86,000 செலவு செய்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளது.
தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது. மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போடுகின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.