நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் வரும் 22-ம் தேதி நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறையில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என திமுக கூறி வருகிறது.
இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்க கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் மார்ச் 22-ல் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அந்தந்த மாநிலங்களின் முக்கிய கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். இந்த பின்னணியில், முதல்வரின் அழைப்பை நேரில் தெரிவிப்பதற்காக, முதல்வரின் பிரதிநிதிகளாக திமுக மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் நேற்று முதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.
நேற்று ஒடிசா தலைநகர் பவனேஸ்வர் சென்ற திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து மு.க.ஸ்டாலினின் அழைப்பை நேரில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “மார்ச் 22 அன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக நவீன் பட்நாயக் கூறியுள்ளார். அவர் எங்களுடன் போராடுவார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக அமைச்சர் எ.வ. வேலு, திமுக எம்பி வில்சன் ஆகியோர் இன்று ஆந்திரா சென்றனர். அவர்கள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரைச் சந்தித்து மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதேபோல், அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்பி ஆகியோர் அடங்கிய மற்றொரு குழு இன்று கர்நாடகா சென்றது. இக்குழு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரைச் சந்தித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.