உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மும்மொழி கொள்கை வேண்டும் என ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
திமுகவின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.