பாஜக தவிர மற்ற அனைத்து தமிழக கட்சிகளும் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக ஓர் அணியாக நிற்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே கடுமையான வார்த்தைப்போர் நிலவி வருகிறது. பள்ளிக்கல்வி துறை முதல் நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் குறித்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்.பி.க்கள் பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மட்டும் தான் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நிற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது:-
மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தவறு. அது கண்டிக்கத்தக்கது. புதிய கல்வி கொள்கை என்பது 2020ல் அறிவித்தார்கள். தற்போது 5 ஆண்டுகள் கழித்து மும்மொழி கொள்கையை திணிப்பது என்ன நியாயம். 4 ஆண்டுகளாக சொல்லாமல் தற்போது ஒப்புகொள்ளவில்லை. அதனால் நிதி தர முடியாது என கூறுவது அரசியல் தானே.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான். எப்போதும் அது மாறாது. வடமாநிலங்களில் இந்தி தான் ஒரே மொழி. அங்கு பேச்சு மொழி, ஆட்சி மொழி என எல்லாம் இந்தி மட்டும் தான். 2ம் மொழியான ஆங்கிலத்தை கூட அவர்கள் கற்று கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டை எப்படி அவர்கள் இதுபோன்று சொல்ல முடியும். பாஜக கட்சி தவிர அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் உள்ளனா். அது இருமொழி கொள்கை மட்டுமே என்பது தான். அதை நான் வரவேற்கிறேன். இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.