இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழியை திணிக்கவே இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி விளக்கம் அளித்திருப்பதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கான ரூ.2154 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது குறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது. 2023 – 24 இல் ரூ 1876 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது; 2024 – 25 க்கு 4305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது; மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படும்; எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது. மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை அவர்கள் கற்பார்கள். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு சு.வெங்கடேசன் எம்பி அளித்த பதில்: பா.ஜ.கவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே அமைச்சர்களின் நாடாளுமன்ற பதில்களும் அமைந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே இது. கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும். தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தருவது என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது, மக்களை ஏமாற்றுவது! இந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தருகிற விளக்கம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும். இந்தி திணிப்பை நியாயப்படுத்தும் பாஜக இந்தி திணிப்பை நியாயப்படுத்தி தினந்தோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு அவர்களுடைய விவாத தரம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் இருந்து தானே முதலில் தாய்மொழிக் கல்வி துவங்கி இருக்க வேண்டும்! ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கலாமா என்ற கேள்விக்கும் அமைச்சரிடம் விடை இல்லை. ஜனநாயக விரோதத்தின் உச்சம் எங்கு கேட்டாலும் பொறுப்பான பதில் கிடைக்காது என்கிற மத்திய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.