இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா?: எச்.ராஜா!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை இளையான்குடிக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு காரில் சென்றார். அப்போது அவர் இளையான்குடிக்குள் செல்ல முற்பட்ட போது, அவரை இளையான்குடி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். நகருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

எச்.ராஜா பேசுகையில், “இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? காவல் துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது. எதற்காக எனக்கு தடை விதிக்கிறீர்கள். இந்த பகுதியில் செல்ல கூடாது என்று தடை ஏதும் உள்ளதா? காவல் துறை எதற்கு இருக்கிறீர்கள். கோயில்களில் இந்துகள் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். அதை தடுக்க முடியவில்லை. செல்ல அனுமதிக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம்” என்றார். இதையடுத்து அவரை நகர் வழியாக செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “ஏற்கெனவே 2012-ம் ஆண்டு இளையான்குடியில் எச்.ராஜா தலைமையிலான பாஜகவினரின் போராட்டத்தில், ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு இளையான்குடியில் பாஜகவைச் சேர்ந்த வேலுர் சையது இப்ராஹிம் டீ குடித்து கொண்டிருந்தபோது, அவரது காரை ஒருத்தரப்பினர் சேதப்படுத்தினர். அதேபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக தான் நகர் வழியாக செல்ல அனுமதி மறுத்தோம்” என்று கூறினர்.

பின்னர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜாவிடம் செய்தியாளர் ஒருவர், தமிழக வெற்றிக்கழக பொருளாளார் வெங்கட் என்பவர், தங்களை எதிர்ப்பவர்கள் 2026 தேர்தலில் அழிந்து போவார்கள் என்று கூறுகிறார் என கேட்டார். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, யார் அது வெங்கட், இதுவே நீங்க சொல்லித்தான் அவர் எங்கிட்டு இருக்கிறார் என்றே தெரியும்.. தவெகவை நான் சொல்கிறேன்.. முதலில் நீங்கள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.. டெபாசிட் வாங்க வேண்டும்.. சவால் விடுகிறேன்.. சினிமாவில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்.. நான் திரும்பி சொல்ல வேண்டியதில்லை.. அதை எல்லாம் செய்து ஆட்டம் போட்டவரை வைத்துக் கொண்டு, என்னங்கடா வித்தை காட்டுறீங்க என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எச்.ராஜாவிடம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முறைகேடாக பாடநூலை விற்றதாக 3 பேர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் உள்ள லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி என்று கடுமையாக விமர்சித்தார். சினிமா பாட்டு பாடுகிறவரை பாடநூல் கழகத்திற்கு போட்டால் எவ்வளவு அசிங்கம் என்று கடுமையாக பேசினார்.