சேலம் ரெளடி வெட்டிக் கொலை: 4 பேர் சுட்டுப் பிடிப்பு!

சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த நிலையில், தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சேலத்தில் இருந்து ஜான் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக இன்று(மார்ச் 19) காலை காரில் புறப்பட்டுச் சென்றனர். ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்றுக் கொண்டு இருந்தது. அவர்களது காரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஜான் சென்ற காரை வழி மறித்து நிறுத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் ஜானை வெட்டினர். இதைத் தடுக்கச் சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். முன்பகைக் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உள்பட 15 – க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தெரியவந்ததுள்ளது.

ரெளடி ஜானை கொலை செய்துவிட்டு சேலம் நோக்கி செல்லும்போது சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் காவல் துறையினர் 4 பேரை காலில் சுட்டுப் பிடித்தனர். குற்றவாளிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கும் முயன்றபோது காவல் ஆய்வாளர் ரவி மற்றும் முதல் நிலை காவலர் யோகராஜ் இருவருக்கும் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த 4 ரெளடிகள் தற்போது மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.