தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார். நேற்று சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர் பேசினார். “அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது” எனக் கூறினார். ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், திமுக ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றப் பின்னணி உடையோரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்கிறது” என்றார்.

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச முயற்சித்தோம். ஆனால் சபாநாயகர் அப்பாவு என் கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மதுரை அருகே காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்திருக்கிறார். கிட்டத்தட்ட சினிமா பாணியில் நடந்த கொடூரம் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் திமுக நிர்வாகி குமார் கடத்தி செல்லப்பட்டு கொலை என்று ஒவ்வொரு நாளும் கொலைப் பட்டியல் வெளியாகி வருகிறது. திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல் தான்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜாகீர் உசேன் உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்த போது, காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, முதலமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். உங்களுடைய ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா.. அப்படி நடக்கவில்லையா என்கிறார். அதெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள். கொலைகளை எண்ணிக்கை அடிப்படையிலா ஒப்பிட வேண்டும்.. மக்களின் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்து கொள்வதே அரசின் கடமையாகும். தங்கம், வெள்ளி நிலவரத்தை போல் கொலை நிலவரம் வந்துவிடக் கூடாது. சட்டசபையில் இருந்து நாங்கள் பயந்து கொண்டு வெளிநடப்பு செய்யவில்லை. எங்களை பேசுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.