கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் அவரை அரசு சார்பில் வரவேற்றனர்.

சென்னையில் நாளை(மார்ச் 22) நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏழு மாநிலங்களின் முதல்வா்கள், கட்சித் தலைவா்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திமுக குழு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயில் விஜயன் இன்று வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தடைந்தார். மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.