சிறை தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் சரணடைய விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைவதிலிருந்து இடைக்காலமாக 4 வாரங்களுக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒரு பதிவை தன் சமூக வலைதள பக்கத்தில் பார்வேர்டு செய்திருந்தார் என சொல்லப்படுகிறது. இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் கருத்தைக் கண்டித்து எஸ்.வி. சேகரின் வீட்டின் முன்பு அப்போது போராட்டங்களும் நடந்தன. இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், தீர்ப்பு விதிக்கப்பட்ட பின் அபராத தொகையை செலுத்தியதோடு, தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனால் அந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் எஸ்.வி.சேகர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர் எஸ்.வி.சேகர் சாதாரண நபர் அல்ல. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கல்வியறிவு பெற்றவர். ஒரு தவறான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிடும்போது ஏற்படும் பின்விளைவு குறித்து நன்கு உணர்ந்தவர். அவதூறு பதிவு தவறுதலாக இந்த அவதூறு பதிவை வெளியிட்டதாக அவர் கூறுவதை ஏற்க இயலாது. ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார். எனவே, சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று வாதிட்டார்.

எஸ்வி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தவறுதலாக குறிப்பிட்ட ஒரு பதிவினை எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த கருத்தை உடனடியாக நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, சிறை தண்டனையும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார். அதற்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால் என்ன காரணத்திற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட வழக்கில், எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத கால சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்த எஸ்.வி.சேகரின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மீண்டும், மேல்முறையீடு செய்வதற்காக மூன்று மாதம் தண்டனை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். அவருடைய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.வி.சேகர் சரணடைவதிலிருந்து இடைக்காலமாக 4 வாரங்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.