என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நோன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தன்னுடைய வாழ்க்கையின் இளமைக் காலம் முதல் நிறைவு நாள் வரை இஸ்லாமிய நண்பர்கள் பலரை பெற்றிருந்தவர் எம்ஜிஆர். தனது நண்பர் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில்தான் மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை அவர் நடித்த படத்திலேயே பாடிக் காட்டியவர். அந்த மகத்தான மனிதரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இஸ்லாமியத்தை தவறாக சித்தரித்து திரைப்படக் காட்சிகள் வெளிவந்த போதெல்லாம் உறுதிப்பட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஒப்பற்ற இரு தலைவர்களின் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான்.

அந்த ஒப்பற்ற தலைவர்களை போல் இஸ்லாமிய மக்களுக்கு உற்ற நண்பனாகவும் சகோதரனாகவும் பாதுகாவலனாகவும் இருப்பேன். பதவிக்காகவோ புகழுக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை. பேரறிஞர் அண்ணா கூறியபடி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எண்ணத்தில்தான் வந்தேன். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் கிடையாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன். எல்லாருக்கும் சமநீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னை நம்பாவல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள், நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.