பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் மண்ணைக் கவ்வும்: எஸ்.வி.சேகர்!

“போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும்” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூன் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இவர் முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.