தேவநாதன் சொத்துகளை ஏலம்விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா?: உயர் நீதிமன்றம்!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து தேவநாதன் யாதவ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கபட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பாதிக்கபட்ட அனைவரும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கபட்டது.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து தேவநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.