தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை பார்த்திபன் போன்ற ஆளுமைகள் பாராட்டுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் இல்லையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக காசு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்கள் மாளிகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியதாவது:-
ஆளுநர் குறித்து நான் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எவ்வளவு மேன்மையானது என்பது அதை யார் நடத்துகிறார்கள் என்பதை பொறுத்தது. ஆளுநர் மாளிகைக்கு வந்ததிலிருந்து தமிழ் நன்றாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழில் பாடல் கேட்பது கலாச்சாரம் மிகுந்த விளக்கு ஏற்றுவது, தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழ்நாடு ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வகையில் நான் அவரை காதலிக்கிறேன். நான் தமிழில் பேசினால் ஆளுநருக்கு புரியுமா என அதிகாரிகளிடம் கேட்டபோது ஆளுநர் தற்போது தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார். நீங்கள் பேசுங்கள் அவருக்கு நன்றாக புரியும் என்றார்கள். எனது தமிழ் புத்தகங்களை அவருக்கு கொடுத்திருக்கிறேன். நானும் அவர் முன்பு தமிழில் பேசுகிறேன். ஆளுநருக்கு எந்த அளவு தமிழ் புரிகிறது என்றால், ஒருவர் பேச ஐந்து நிமிடங்களிலேயே அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பது தெரிகிறது, பிறருக்கு உதவி செய்யும் சந்தோஷம் வெளியில் தெரியாது அது ஒரு வித கர்வம். இவ்வாறு பேசி இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் ஆளுநரை பாராட்டியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சமஸ்கிருதம், சனாதனம் குறித்து பேசி வரும் ஆளுநரை பார்த்திபன் பாராட்டியது தவறு என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை பார்த்திபன் போன்ற பாராட்டுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் இல்லையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
திரைத்துறையில் தங்களுக்கென புதிய பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர். அந்த ஒத்த செருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று. மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.
ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப் பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள். இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல, “குழந்தை திருமணம் நல்லது. நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்” என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா? அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா? தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா?
இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.