மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம் நன்மைக்கே என்று தெரிவித்தார்.
டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுகவின் புதிய அலுவலகத்தை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அமித்ஷா – பழனிசாமி சந்திப்பு பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், டெல்லியில் அமித்ஷாவுடனான பழனிச்சாமியின் சந்திப்பு குறித்து, சட்டப்பேரவைக்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார்.
அந்தவகையில், டெல்லியில் அமித்ஷா உடனான பழனிசாமியின் சந்திப்பு மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுமா? உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளுக்கு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பதிலளிக்கையில், “எல்லாம் நன்மைக்கே” என்று மட்டுமே குறிப்பிட்டு சொல்லிவிட்டு, சட்டப்பேரவைக்குள் சென்றார்.