அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை என்று கூறிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகவில்லை என்றால், அவமரியாதையை சந்திப்பார் என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 45 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் அமமுகவை இணைக்கிறார்கள். இதனால் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்று பேசப்பட்டு வருகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு தொடர்பான கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பதற்கு சாத்தியமே கிடையாது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது, பிரிந்தது தான். அதிமுக தொண்டர்கள் கோயிலாக கருதப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவிடிகளை வைத்து தாக்குதல் நடத்திய போது, அவர் அதிமுகவில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இதனால் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டாலும், ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அமைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு வந்தோம். எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலாளர்களை வைத்து தாக்கினார்கள். அதுதான் உண்மை. அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன? எங்களை தாக்கிய பின், அடியாட்களை தலைமை கழகத்திற்கு அழைத்து வந்துவிட்டு எங்கள் மீது பழிபோகிறார்கள். இது அனைத்தும் காவல் துறையினரின் பதிவுகளில் உள்ளது.
அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்கிறேன். அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற சூழல் வரும். அதனை திரும்ப திரும்ப சொல்கிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வெற்றிபெற கூடிய வாய்ப்புகளே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம் என்று தானே என்னிடம் ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. ஆனால் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.