அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளதாவது:-
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 11 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
பகுதி நேரப் பணியாக இருந்த போதிலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.
அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் ரூ.12,500 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கி வரும் திமுக அரசின் செயல் சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். இதனை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பெருமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று அதிகாரிகளால் உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் தொடர்கதையாகிப்போனதுதான் வேதனையின் உச்சம்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு சிறப்பாசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு சிறப்பாசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், அதையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
பின்னர் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இருபள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர ஆசிரியர்களையே, ஆசிரியர் இல்லாத வகுப்புகளையும் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதுதான். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும்தான் பகுதிநேர ஆசிரிரியர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியைத்தானே பகுதிநேர ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக்கோருகிறார்கள்? இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய 44,767 கோடியிலிருந்து, வெறும் 300 கோடி நிதி ரூபாய் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கி, காலமுறை ஊதியம் வழங்க போதுமானது. அதை நிறைவற்றுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? அறிவையும், நேர்மையையும் கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது பச்சைத்துரோகம் இல்லையா?
ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் அரசாணையை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டுமெனவும், தேசத்தின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.