தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை: கார்த்தி சிதம்பரம்!

தெருநாய் அச்சுறுத்தல் மற்றும் வெறிநாய்க்கடி அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடியிடம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகள் குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். உலகளவில் தெருநாய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில், 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்பாட்டில் அது பயனற்றதாக உள்ளது.

தற்போதைய அமைப்பின் போதாமை குறித்து நான் கவலைகளை எழுப்பினேன். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்தப் பிரச்சினையை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது. இப்பிரச்சினைக்கு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீர்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை நிறுவுமாறு நான் பரிந்துரைத்தேன். மேலும், இந்த சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.