தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கும் முல்லை பெரியாறு அணையால் ஆபத்து; அதனைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து இடம் பெற்றுள்ளதால் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; எம்புரான் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ‘சிட் பண்ட்’ நடத்தி வரும் கோகுலம் கோபாலனின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மலையாள திரைப்படமான எம்புரான், அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்த எம்புரான், கொள்கை அரசியலையும் கேரளத்தின் கள அரசியலையும், வீரியமாகப் பேசுவதோடு, மத அரசியலின் அபாயத்தையும் ஆழமாக விவாதிக்கிற ஒரு படம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்படும் ஒரு மதக் கலவரம், அதனால் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகும் சிறுபான்மை மக்கள், அதை கொடூரமாக அரங்கேற்றியவர்கள், கேரளத்தில் அரசியல் தலைவர்களாக மாறி நிற்பது, பின்னர் அவர்கள் கேரளாவைக் குறிவைப்பது என கவனமாகவும், நுட்பமாகவும் கதையைத் தொடங்கிய திரைக்கதை ஆசிரியர் முரளி கோபியின் பேனாவை, அவ்வப்போது பிடுங்கிய படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை கக்க வேண்டிய தேவை எங்கே வந்தது என்பதுதான் நமது கேள்வி.
பான் இந்தியா படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, செனகல், வட இந்தியா என சுற்றி வரும் திரைப்படம், கடைசியில் நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணையில் வந்து நிற்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது. பழங்குடிகள், காடுகள், மாவோயிஸ்டுகள் என்று ஆழ ஊடுருவும் படம், சர்வதேச போதை கும்பல்களை பற்றியும் எடுத்துச் சொல்லிய நிலையில், எங்கே வந்தது முல்லை பெரியாறு..? அசுரனில் நாம் ஆழமாக நேசித்த அந்தக் கதாநாயகி மஞ்சு வாரியார், தன்னுடைய வாயால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும், பிரிட்டிஷ்காரர்களையும் பொது மேடையில், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் பேச்சு உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒன்று.
கேரளாவில் நடக்கும் ஒரு கேடுகெட்ட அரசியலுக்கு, பலிகடாவாக முல்லைப் பெரியாறு அணையை மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. ‘முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்துநிற்கிறது என்று ஒரு வசனம்..!!!’. ‘இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை,அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்..!!!’ (அதாவது ஒரு குறிப்பிட்ட மதவாத கும்பல் அணையை குண்டு வைத்து தகர்க்க சதி செய்வதாக,கதாநாயகன் கொண்டுவரும் ஒரு செயற்கையான முன்னோட்டத்திற்காக வைக்கப்பட்ட ஒரு காட்சி) ‘அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம்..!!!’ என படத்தின் மொத்த களத்தையும் அடித்து நொறுக்குகிறது மேற்கண்ட வசனங்கள்.
பிரித்திவிராஜ் சுகுமாரன் தமிழ் திரையுலகத்தின் மூலமாகத்தான் தன்னுடைய அடையாளத்தை பெற்றார் என்பதை கேரளத்து ரசிகர்களே மறக்காத நிலையில், மறுபடியும் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை மீது அவர் கை வைப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துகளை வைத்திருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிருத்திவிராஜனின் இந்த இனவெறிக்கு பலியாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழகத்தில் எம்பிரான் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எவரும் அந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக காட்டப்பட்டு இருக்கும் எந்த பிம்பத்தையும் விமர்சிக்காதது நமக்கு வருத்தமே.
180 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படம், போகிற போக்கில் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்து தன்னுடைய இனவெறியை வெளிப்படுத்தி இருப்பது இரு மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் மறந்துவிடக்கூடாது. அழியாத கோலங்கள் என்று காலத்தை வென்ற திரைப்படங்களை நாங்கள் எடுக்கும் போது, நீங்கள் அஞ்சரைக்குள்ள வண்டி என்று திரைப்படம் எடுத்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். கேரளத்து இடதுசாரிகளை திருப்திப்படுத்துவதற்காக, வலதுசாரிகளின் மீது கை வைத்து,18 காட்சிகளை வெட்டுவதற்கு சம்மதித்த படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடாவிட்டால், கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக, முதல் முற்றுகை போராட்டத்தை தொடங்குவோம். பின்னர் அதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்படும்.
கொடுமை என்னவென்றால் மலையாளத்தில் வெளியான அதே 27 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் படம் வெளியாகி இருக்கிறது என்பதுதான். பிரித்திவிராஜ் சுகுமாரன், மோகன்லால், மஞ்சு வாரியார், டோவீனோ தாமஸ், பாசில், விவேக் ஓபராய், கோகுலம் கோபாலன் உள்ளிட்டவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய ஒன்று.. தமிழகத்தில் உங்களுக்கு சொந்தமாக ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் தயவு செய்து அதை விற்றுவிட்டு கேரளாவில் போய் முதலீடு செய்யுங்கள்.. ஈவு இரக்கமற்று, தமிழர்களின் வயிற்றில் அடிக்கிற, தமிழர்களின் சொத்துக்களை சூறையாடுகிற, தமிழர்களின் நிலத்தை அபகரிக்கிற, கனிம வளங்களை கொள்ளையடிக்கிற.. மலையாள வன்மத்தின் இன்னொரு பரிணாமம் இந்த எம்புரான் எனும் செல்லுலாயுடு குப்பை. இவ்வாறு பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியுள்ளார்.
எம்புரான் சினிமாவில் குஜராத் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. எம்புரான் சினிமாவை தடை செய்யவும் வலியுறுத்துகின்றன. இதனால் எம்புரான் திரைப்படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டு விவசாயிகளும் எம்புரான் சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.