எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக கோவை நீதிமன்றம் சம்மன்!

கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்பொழுது கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது எனவும், ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது , கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கினை கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்து இருந்தார். குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்த கே.சி பழனிச்சாமியிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியிருந்தது. விசாரணயில் இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானது.

இந்நிலையில் அந்த வழக்கு, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி இருந்தார். குற்றவியல் அவதூறு வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்திரவிடப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 15 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.