விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!

விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால் ரூ.350 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைத்து விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் 7 லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி கூலிகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.50 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு, கடந்த பல ஆண்டுகளாகவே உயர்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று, விசைத்தறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு, வாடகை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக, கூலி உயர்வு கோரி, பத்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூகமான முடிவு எட்டாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் விளைவாக, கடந்த 13 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ரூ.30 கோடி என சுமார் ரூ.390 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதிகளில், சுமார் 50,000 விசைத்தறிகள் செயலிழந்து போயுள்ளன. கூலி உயர்வு வழங்கப்படாவிட்டால், மேலும் விசைத்தறிகள் உற்பத்தியை இழந்துவிடும் என்று விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.