முஸ்லிம்கள் குல்லா, கிறிஸ்தவர்கள் சிலுவை அணிய வேண்டாம் என ஆ.ராசா சொல்வாரா?: எச். ராஜா!

திமுக என்பது நச்சுப் பாம்பு, இந்துக்களை அழிப்பதற்கான ஒரு சக்தி என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது, “கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்” என்றார்.

இந்நிலையில் ஆ.ராசா கருத்து தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:-

திமுக-வில் இருக்கின்ற மாற்று மதத்தினர்களான முஸ்லிம்கள் குல்லா வைக்க வேண்டாம், கிறிஸ்தவர்கள் சிலுவை அணிய வேண்டாம் என ஆ.ராசா போன்ற இந்து விரோத சக்திகளுக்கு சொல்வதற்கு தைரியம் வருமா?.

இந்துக்களை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்.. திமுக அமைப்பு ரீதியாக இந்து விரோதிகள் என தொடர்ந்து சொல்லி வருகிறேன். அல்லேலுயா சொல்கின்ற ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக வைத்துள்ளனர். அறநிலையத்துறையை அழிப்பதற்கு வைத்துள்ளனர்.

திமுக என்பது நச்சுப் பாம்பு, இந்துக்களை அழிப்பதற்கான ஒரு சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டனும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.